சந்தானத்தின் மகன் எடுக்கும் அவதாரம் : அப்பாவுடன் கைகோர்ப்பு!!

சந்தானத்தின் மகன்….!

நடிகர் சந்தானம் தான் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தின் மூலம் தனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த இருக்கிறார்.

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார். அவர் நடித்த படங்கள் பல சரியான வரவேற்புப் பெறவில்லை என்றாலும் அவர் முடிவை மாற்றிகொள்வதாக இல்லை. அவர் கடைசியாக நடித்த ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் இப்போது டகால்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

டகால்டி படத்துக்குப் பின் அவர் டிக்கிலோனா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் அவரின் மகனும் அவரோடு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்போதே விஜய்யின் நடிப்பை பார்த்து பரிசு கொடுத்த சிவாஜி கணேசன்!!

தளபதி விஜய்……

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில், தனது கடின உழைப்பால் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார்.ஆனால், இவர் முதன் முதலில் வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

இப்படத்தில் இவர் நடிப்பை பார்த்துவிட்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அப்போதே விஜய்யை பாராட்டி, 500 ரூபாய் பரிசும் கொடுத்துள்ளார்.

இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது.

கதை கூறியும் கண்டுகொள்ளாத சூர்யா : பிரபல இயக்குனர் வருத்தம்!!

சூர்யா…!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பணிபுரிந்து வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘குயின், மற்றும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களிலும், இன்னொரு படத்தின் ஆரம்ப கட்ட பணியிலும் அவர் உள்ளார்.

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி தருவதாக அவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு வாக்குக் கொடுத்திருந்த நிலையில் சூர்யாவின் கால்ஷீட்டுக்காக அவர் அலைந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் சூர்யா, கௌதம் மேனனை கண்டுகொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது

பொதுவாக கவுதம் மேனன் தனது படத்தின் கதையை எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கூறமாட்டார். வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கியபோது கமல்ஹாசனுக்கும், என்னை அறிந்தால் படத்தை இயக்கியபோது அஜித்துக்கும் முழு கதையை அவர் கூறவில்லை என்பதும் குறிப்பாக படப்பிடிப்பு தொடங்கி பாதி நிறைவு பெற்ற பின்னரும் அவர் கிளைமாக்ஸ் காட்சியை முடிவு செய்யாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் சூர்யாவின் கால்ஷீட் பெறுவதற்காக அவரிடம் முழு கதையை கூறியது மட்டுமின்றி ஊடகங்களிலும் அவர் சூர்யாவுக்காக தயார் செய்து வைத்திருந்த ஒன்லைன் கதையை கூறியுள்ளார். சூர்யா தனது கதையில் இசை கலைஞராக நடிக்க இருப்பதாகவும் இந்த கதை சூர்யாவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறியதாக தெரிகிறது

கௌதம்மேனன் இவ்வளவு தூரம் இறங்கி வந்தும் சூர்யா அவரை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அவர் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் கௌதம் மேனனுக்கு அவர் படம் நடித்து கொடுப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்?

விஜய்யின் 65-வது படத்தை அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்தது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தடம் பட இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை!!

விஜய் சேதுபதி…

சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் ‘சங்கத்தமிழன்’ என்ற வெளியாகியிருந்தது. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியிருந்தார்.

விவேக் – மெர்வின் இணை இந்த படத்துக்கு இசையமைத்திருந்தனர்.இதனையடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’. இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரித்து வருகிறார்.இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விவேக், இயக்குநர் மோகன் ராஜா ஆகியோர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை கனிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

லோகேஷ் இயக்கத்தில் சேர்ந்து நடிக்கும் ரஜினி, கமல்? அடேங்கப்பா, இது லிஸ்ட்டுலயே இல்லையே!!

ரஜினியும், கமலும்….*

40 ஆண்டுகள் கழித்து ரஜினியும், கமலும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்களாம்.
கார்த்தியை வைத்து கைதி படத்தை எடுத்து அதை விஜய்யின் பிகிலோடு சேர்த்து ரிலீஸ் செய்து வெற்றிக் கண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதனாலேயே அனைவரின் கவனமும் லோகேஷ் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது அவர் விஜய்யை வைத்து தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் அண்மையில் ரஜினியை அவரின் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார். அப்பொழுது ரஜினி லோகேஷை பாராட்டியிருக்கிறார். மேலும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ரஜினி தெரிவித்தாராம்.

தளபதி 64 படத்தை முடித்த பிறகு லோகேஷ் ரஜினிகாந்தை வைத்து தான் படம் எடுக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் ரஜினியின் நண்பர் கமல் ஹாஸனும் நடிக்கிறாராம். 40 ஆண்டுகள் கழித்து ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்கப் போவது குறித்து தான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்பு சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியும், கமலும் சேர்ந்து அரசியல் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் சேர்ந்து படத்தில் நடிக்கப் போகிறார்கள். லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப் போகிறாராம். ரஜினியையும், கமலையும் தனித்தனியாக இயக்கவே பல இயக்குநர்கள் தவமிருக்கிறார்கள். இந்நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு இப்படி ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் அடுத்தடுத்து புதுப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. கமல் ஹாஸன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் கமல் தற்போது ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித்!!

அஜித்..

அஜித் நடிப்பில் 24 வருடங்களுக்கு முன் வெளியான படம் ஒன்று, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீசாக உள்ளது.

அஜித் நடித்து, வி.சி.குகநாதன் டைரக்டு செய்த படம், `மைனர் மாப்பிள்ளை.’ 1995-ம் ஆண்டில் தயாராகி வெளிவந்த இந்த படம், 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது. இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தார்கள்.

மகனுக்கு பெண் தர மறுத்த ஸ்ரீவித்யாவிடம் சவால் விடும் வடிவேல், அதற்காக அஜித்தையும், ரஞ்சித்தையும் களம் இறக்குகிறார். அவர் நினைத்தது நிறைவேறியதா? என்பதே திரைக்கதை. படத்தில் 5 பாடல்கள், 5 சண்டை காட்சிகள் இடம்பெற்றிருந்தன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த படம், இது.

24 வருடங்களுக்குப்பின், இந்த படம் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டுள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வி.சி.குகநாதன் டைரக்டு செய்திருந்தார். அவரே `மைனர் மாப்பிள்ளை’ படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் : காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்!!

அஞ்சலி அமீர்…

ஆசிட் வீசி எரித்து விடுவேன் என காதலன் தன்னை மிரட்டுவதாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் அஞ்சலி அமீர். தமிழில் பேரன்பு படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். திருநங்கையான இவர் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பங்கேற்றார். இந்நிலையில் அவர் தனது முகநூலில் நேரடியாக கண்ணீருடன் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை காதலன் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் அவருடன் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். அதனால் அவர் என்னை, ஆசிட் ஊற்றி எரிக்க போவதாக மிரட்டுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கண்ணீர்விட்டு கதறி அழுதபடி பேசிய அஞ்சலி அமீர் காதலன் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

தன்னுடைய சேமிப்பில் இருந்து இரண்டு ஆண்டு களில் சுமார் 4 லட்சம் வரை அவர் பறித்துகொண்ட தாகவும் கூறியிருக்கிறார். அந்த வீடியோ முடிவில் அஞ்சலி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாங்க முடியவில்லை என்றும், தற்கொலை செய்யும் மன நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்த பேஸ்புக் லைவ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தனக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை, பெற்றோரும் உடன் இல்லை என்பதால், இந்த பிரச்சினையை தீர்க்க போலீஸ் அதிகாரிகளை அணுக திட்டமிட்டுள்ளார். நாட்டின் முதல் திருநங்கை நடிகையான அஞ்சலி அமீர் தனது பயோகிராபி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 2020-ம் ஆண்டு மே மாதம் இதற்கான வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளார். தன்னை சித்ரவதை செய்த காதலனின் பெயரை அவர் கடைசி வரை சொல்லவில்லை.

அருண் விஜய்யின் கதாபாத்திரம் இதுதான் : அக்னி சிறகுகள் படக்குழு அறிவிப்பு!!

அருண் விஜய்….

நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அக்னி சிறகுகள்’. ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.எஸ்.பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

டி.சிவா அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார். மூடர்கூடம் நவீன் இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், விஜய் ஆண்டனி சீனு எனும் கதாபாத்திரத்திலும், அக்‌ஷரா ஹாசன் விஜி எனும் கதாபாத்திரத்திலும், சென்ராயன் டாக்ஸி தல எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், அருண் விஜய்யின் கதாபாத்திரத்தையும் அவரது நியூ லுக்கையும் படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி இப்படத்தில் அருண் விஜய் ரஞ்ஜித் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்!!

ரஜினி..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தில் பிரபல நடிகர் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

மூன்றுமுகம், பாண்டியன் படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையில் ரிலீசாக உள்ளது.இந்நிலையில், தர்பார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து பிரபல தெலுங்கு நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் தர்பார் படத்தில் நடிக்க மறுத்ததாக அவர் கூறியுள்ளார்.கன்னட படமான அவனே ஸ்ரீமன் நாராயணா அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 27-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.